ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : கன்னி

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (18:00 IST)
சமயோஜித புத்தியும், சகஜமாக எல்லோரிடமும் பேசிப் பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து பாடாய் படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி மன நிம்மதியை தருவார். பக்குவமாய் பேசி தடைபட்ட காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விலகிப் போன உறவினர்கள், நண்பர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பூர்வீக சொத்திலிருந்த பிரச்சனைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அம்மாவுக்கு இரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணத்தட்டுப்பாடு, வழக்கில் பின்னடைவு, வீண் செலவுகள் வந்து நீங்கும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் உடனே முடியும். மகளுக்கு திருமணம், மகனுக்கு வேலையும் கிடைக்கும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வாகன விபத்து, உத்யோகத்தில் பிரச்சனைகள் வந்து செல்லும்.

ஐந்தால் வீட்டை விட்டு ராகு விலகுவதால் பிள்ளைகளின்முரட்டுக் குணம் விலகும். பாசமாக நடந்து கொள்வார்கள். அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணஉதவியும் உண்டு. கன்னிப் பெண்கள் தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வார்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிப்பெண்களே! நெடுந்தூர பயணங்கள் வேண்டாமே! பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். எனினும் கொஞ்சம் கவனமாக இயக்கப் பாருங்கள். சிறு சிறு விபத்துகள் வரும். அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களே! மறதி நீங்கும். மதிப்பெண் கூடும்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்கள் வளைந்து கொடுத்து போவார்கள். உணவு, சிமெண்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு, பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் பழைய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வந்து போகும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வாகனம் வாங்குவீர்கள். சொத்து தகராறு சுமுகமாக முடியும்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

இந்த ராககேதுப் பெயர்ச்சி உங்களின் பலம் பலவீனத்தை உணர வைப்பதுடன் புதிய பாதையில் பயணம் செய்ய வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்