ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : துலாம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:56 IST)
நீதி, நேர்மை, நியாயம் என தர்ம வழியில் செல்பவர்களே! 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் இணைந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், அம்மாவுடன் வீண் வாக்குவாதங்களையும், உடல்நலக்குறைவுகளைவும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்பொழுது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை பைசல் பண்ணுவீங்க. குடும்பத்தினர்கள் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அம்மாவின் முகம் மலரும்.

அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாட்களாக மனதிற்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்பொழுது நிஜமாக கட்டும் வாய்ப்பு அமையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வி. ஐ. பிகள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள் என உங்களின் நட்பு வட்டம் இனி விரியும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயங்கள், சொத்துச் சிக்கல்கள் வந்துபோகும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் திருமணம் கூடி வரும். வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும்.

வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நண்பர்களின் உதவிக் கிடைக்கும். கன்னிப் பெண்களின் காதல் கனியும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள். மாதவிடாய் கோளாறு, இரத்தசோக நீங்கும். அரசியல்வாதிகள் வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தலைமையின் ஆதரவு எப்போதும் உண்டு. வண்டிக்காக வாங்கிய லோனை கொடுத்து முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். ஷேர், புரோக்ரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி மதிப்பார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கேது பலன்கள் :
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் தடுத்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த இடத்தில் பணம் உதவி கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி மற்றும் சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையை புரிந்துக் கொள்வார்கள். கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் அப்பாவிற்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் விட்டுக் கொடுத்து போங்கள். அவர் வழி சொத்துக்களால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவன வாய்ப்பை ஏற்றுக் கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

இதுவரை புதிய முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்ட ராகுவும், கேதுவும் இனி திடீர் யோகத்தையும், புகழையும் அள்ளித் தருவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்