ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : விருச்சிகம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:53 IST)
புன் சிரிப்பாலும், அறிவுப் பூர்வமான பேச்சாலும் மற்றவர்களின் மனதில் எளிதாக நுழையும் உங்களை இந்த ராகுவும்-கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும், பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத்தகுந்தாற்போல கொஞ்சம் செலவுகளும் இனிப் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்பொழுது கைகூடும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வெடித்தாலும் ஒற்றுமை பாதிக்காது. உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிய ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வி. ஐ. பிகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மே மாதம் முதல் வீடு, வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் மகிழ்ச்சி தங்கும். எதிலும் வெற்றியுண்டு. 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் டென்ஷன், சிறுசிறு அவமானங்கள், வாகன விபத்துகள் வரக்கூடும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகளுக்கு நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அவ்வப்போது வரும் திடீர் பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். உறவினர்கள் சிலர் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசவேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பாருங்கள். வழக்குகளில் இழுபறியான நிலை மாறும். கன்னிப்பெண்கள் சோம்பலிலிருந்து விடுபடுவார்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். காதல் விவகாரங்களில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். வீடு, மனை வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் இருந்து வந்த மோதல்போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். உங்களின் ஆலோசனையையும் ஏற்பார். சக ஊழியர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினர்களுக்கு தள்ளிப் போன புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது தடித்த வார்த்தைகள் வேண்டாம். மனைவியுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளை பாக்யம் கிடைக்கும். கண், காது வலிக்கும். செலவுகள் அதிகரிக்கும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு, புகழ் கூடும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருங்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் சகோதரருடன் அனுசரித்து போவது நல்லது.

கேது 8-ல் அமர்வதால் முன் கோபம் அதிகமாகும். வாகன விபத்துகள், வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கு. மற்றவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மீகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டிற்கு செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரும். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் ஏனோ தானோ என்று படிக்காமல், ஆர்வத்துடன் படிக்கப்பாருங்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு உண்டு.

இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களை சுயநலத்துடன் செயல்பட வைத்து முன்னேற வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்