ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : தனுசு

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:50 IST)
தளராத மனசும், தான தர்மங்களில் ஈடுபாடும் கொண்டவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் என்ன தரப்போகிறது என்று பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுதடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்துப் போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். படிப்பின் மீது இருந்த அலட்சியம் மாறும். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். பயணச் செலவுகள் அதிகரிக்கும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள்.

ராசியில் நிற்கும் ராகு அவ்வப்போது தலைவலி, வீண் சந்தேகம் மற்றும் சலிப்பையும் உண்டாக்குவார். உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் உதவிக் கேட்டு வந்து நிற்பார்கள். வீண்பகை, மனக்கசப்புகள் வரும். கன்னிப்பெண்கள் பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுவது நல்லது. தடைபட்ட கல்யாணம் முடியும். தெய்வபலத்தால் பிரச்சனைகளை சமாளிக்கும் அற்றல் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் வரக்கூடும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இரவுநேரம் வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை விட்டுப்பிடிக்கப்பாருங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். உத்யோகத்தில் தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களுக்கு பரிசு, பாரட்டுகள் குவியும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கேது பலன்கள் :
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக சிலவற்றை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். சொத்துப் பிரச்சனை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் தடைபட்ட வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்ததை கொடுத்து முடிப்பீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை, ஏமாற்றங்கள், அலைச்சல்கள் வந்து செல்லும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் பயம் விலகும். எதிலும் வெற்றியுண்டு.

7-ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வேலையாட்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் அரட்டை வேண்டாம். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள்.

இந்த இராகு-கேது மாற்றம் உங்களை மேலும் பக்குவப்படுத்துவதுடன், பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்