ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : மகரம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:48 IST)
மனம் விட்டு பேசும் நீங்கள், மந்திரியாக இருந்தாலும் பொய் சொன்னால் மன்னிக்க மாட்டீர்கள். உங்களுக்கு இராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமலே பிரச்சனைகளில் சிக்க வைத்ததுடன், தலை வலி, முதுகுவலி, கால்வலி என புலம்பித் தவிக்க வைத்த ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் விட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! அந்த அவலநிலையிலிருந்து விடுபடுவீர்கள். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். பிரிந்திருந்த கணவன் -மனைவி ஒன்று சேர்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். பார்த்து வெகுகாலமான தூரத்து உறவினர்கள் கூட இனி படையெடுத்து உங்கள் வீடு தேடி வருவார்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் யோகாதிபதியான சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் பணத்தட்டுப்பாடு நீங்கும். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். வி. ஐ. பிகள் உதவுவார்கள்.

பிள்ளைகளிடம் வெறுப்பாக பேசாமல் இனி பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் இனி வாய்தா இல்லை, தீர்ப்பு சாதகமாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, தூக்கமின்மை நீங்கும். கல்யாணம் நடக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். உத்யோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகளெல்லாம் விலகிப் போனதே! வேலைகளை திறம்பட செய்து கொடுத்தும் பணம் வராமல் தவித்தீர்களே! இனி புகழ் கூடும். வருமானம் உயரும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே சண்டையையும், உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் என தொல்லை தந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உதவுவார்கள். செல்வாக்குக் கூடும். திருமணம் முடியும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் பங்காளிப் பிரச்னை தீரும்.

கேது 6-ல் நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசுபணம் புரளும். பழைய கடனையும் பைசல் செய்யுமளவிற்கு வருமானம் கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உடல்நலம் சீராகும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும்.

விரக்தி மற்றும் பணப்பற்றாக்குறையில் உழன்று கொண்டிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் யோகங்களையும் வாரி வழங்குவதாக இந்த ராகு-கேது பெயர்ச்சி அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்