ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : கும்பம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:45 IST)
குலம் கோத்திரம் பார்க்காமல் பாசமாய் பழகி எல்லோருக்கும் உதவும் உங்களுக்கு 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகு-கேது மாற்றம் என்ன செய்யும் என்று பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் தந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் தன்னம்பிக்கையையும், பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! அந்த நிலை மாறும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்கள், வி. ஐ. பிகள் தொடர்பு கிட்டும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மே மாதத்திலிருந்து எதிலும் வெற்றியுண்டாகும். கல்யாணம் கூடி வரும். வேலை கிடைக்கும். அந்தஸ்து உயரும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உடல்நலம் பாதிக்கும். பிரச்சனையில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். கவனம் தேவை.

11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்று போன பல வேலைகள் உடனே முடியும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிராத்தனையை இன்னும் நிறைவேற்றவில்லையே! உடனடியாக குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள்.

வழக்குகள் விரைந்து முடியும். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவார்கள். அண்டை அயலாருடன் உறவு சுமுகமாகும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். கலைத்துறையினர்களுக்கு வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கேது பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால் அவர்களால் அலைச்சலும், செலவும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் உள்மனசில் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும், சந்தேகமும் வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தலைச்சுற்றல், வயிற்றுவலி, அலைச்சல் மற்றும் செலவுகள் உண்டு. 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

கேது 5-ம் வீட்டில் அமர்வதால் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வு எல்லாம் இனி உங்கள் சீட்டைத் தேடி வரும். மாணவர்களுக்கு மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்.

இந்த ராகு கேதுப் பெயர்ச்சி திக்கு திசையறியாது தடுமாறிக் கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்