ராகு-கேது பெயர்ச்சி‌ப் பல‌ன்க‌ள் : மீனம்

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (17:45 IST)
விஷயங்கள் ஆயிரம் தெரிந்தாலும் வெளிக்காட்டாது எளிமையாக வாழ்பவர்களே! 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகு பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, ஷேர் வகையில் லாபம் என தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. ஆடம்பரமான பொருட்கள் வீடு வந்து சேரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்றுவாருங்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வேற்று நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராடம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும், ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பணவரவு உண்டு. பதவிகள் தேடி வரும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களைப் பற்றி வதந்திகள் வெளியாகும். சகிப்புத்தன்மையுடன் செயல்படுங்கள்.

ராகு 10-ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கன்னிப்பெண்கள் விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பிரிஜ், ஏசி வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்கும். பழைய சரக்குகளை அதிரடி சலுகைகளால் விற்பனை செய்வீர்கள். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைஞர்களின் திறமைக்கு பரிசு, பாரட்டு கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும்.

கேது பலன்கள் :
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்தம்- பந்தங்களிடையே கருத்து மோதல் என பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வேண்டா வெறுப்புடன் பார்த்தப் பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். அந்தஸ்து உயரும். காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண் பழி, உடல்நலக்குறைவு, வேலைச்சுமை, விரக்தி வரக்கூடும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிடபம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சகோதரர் உதவுவார்.

கேது 4-ம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள்.

இந்த ராகு-கேது மாற்றம் உங்களுக்கு புது அத்தியாயத்தை தொடங்குவதற்கான அனுபவ அறிவையும், பலரின் நட்பையும் அமைத்து தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்