சித்திரையே புத்தாண்டு: தமிழக அரசு முடிவு சரியா?

புதன், 24 ஆகஸ்ட் 2011 (20:24 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள்தான் என்று தமிழக அரசு புதிதாக சட்டம் கொணர்ந்து மாற்றியுள்ளதே, இது சரியா.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிப்படி மேஷமே முதல் ராசி. மேஷ ராசியில்தான் சூரியன் உச்சமடைகிறார். சூரியனை பிரதானமாக வைத்தே 9 கோள்களும் இயங்குகின்றன. எனவேதான் சூரியன் உச்சமாகும் மாதத்தை சித்திரையை முதல் மாதமாக வைத்து ஆண்டின் தொடக்கத்தை நமது முன்னோர்கள் கணக்கிட்டார்கள்.

சித்திரையை மேஷ மாதம் என்றுதான் கேரளாவில் கூறுகிறார்கள். சூரியனை முதன்மையாக கொள்ளக் கூடிய இனமாக தமிழினம் உள்ளது. சூரியனின் உத்தராயண இயக்கத்தை வைத்து தை முதல் மாதமாக கொள்வது தவறாகும். தை முதல் ஆவணி வரை வடக்கு நோக்கியும், ஆடி முதல் மார்கழி வரை தொற்கு நோக்கியும் சூரியனை பயணிப்பதை அடிப்படையாகக் கொள்ள முடியாது. எனவேதான், சித்திரையை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்கிறோம். அதுவே ஜோதிடப்படியும் முறையாக உள்ளது.

அப்படியானால் முந்தைய அரசு தை மாதப் பிறப்பை புத்தாண்டாக அறிவித்தது ஏன்?

முந்தைய முதல்வர் ரிஷப ராசிக்காரர், மிருக சீரிஷ் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு சனி நட்பு ராசி. சனியின் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம் மகர மாதம் என்கிற தை மாதமாகும். எனவே, அவர் தை மாதத்தை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக அறிவித்தார்.

இன்றைய தமிழக முதல்வர் சூரியனின் ராசியான சிம்ம ராசியில் பிறந்தவர். இவருடைய ஜாதகத்தில் சூரியன் மிக வலுவாக உள்ளார். அதனால்தான் சூரியன் உச்சமாகும் மாதமான சித்தரை மாதத்தை தமிழ் ஆண்டின் முதல் மாதமாக அறிவிக்கும் ஆற்றல் படைத்தவராக உள்ளார்.

சூரியனின் இயக்கத்தை நன்கு உணர்ந்தவர் இன்றைய முதலமைச்சர் என்றே கூறலாம்.

அவருக்கு கட்சியின் சின்னத்தில்தான் சூரியன், இன்றைய முதல்வர் சிந்தனையிலேயே சூரியனாக இருப்பவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்