இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து

புதன், 11 ஆகஸ்ட் 2010 (15:32 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: ஆஸ்ட்ரேலியாவில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் அங்கு சென்று தங்கி படித்து வேலை வாய்ப்பை பெறக்கூடிய வாய்ப்பு இந்தியாவில் இருந்து போகக் கூடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரிய அளவில் குறைந்துவிட்டது. இது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு சமிஞ்சையா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பொதுவாக பார்க்கும் போது இந்தியா கடக ராசி, ரிஷப லக்னத்தில் இருக்கிறது. தசா புத்தி மற்றவைகளைளெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது, காலப் போக்கில் இந்தியாவிற்கு பல நெருக்கடிகள் காத்துக் கிடக்கிறது. அதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இந்தியர்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாவதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு. அதற்கான சமிஞ்சையெல்லாம் தற்போதே தெரிய ஆரம்பிக்கிறது.

குறிப்பாக தற்போது இந்தியாவிற்கு கடக ராசியில் 3ஆம் வீட்டில் சனி இருக்கிறார். 27.12.2011இல் இருந்து இந்தியாவிற்கு 4ஆம் வீட்டிற்கு சனி வரப்போகிறார். இந்த 4வது வீட்டிற்கு சனி வரும்போது உலகெங்கிலும் இருக்கக்கூடிய இந்திய வம்சாவழியினருக்கு சில பாதிப்புகள், நெருக்கடிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது.

தற்போது இந்த கங்காரு தேசம் எடுத்திருக்கக் கூடிய முடிவு போல பல நாடுகளில் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஏனென்றால் தற்போதுள்ள கிரக அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கனியன் பூங்கொன்றனார் சொன்னதெல்லாம் இனிமேல் இல்லாமல் போகும். அவரவர்கள் தன்னலத்துடன் எங்க நாட்டு மக்களுக்கு எதுவும் இல்லை, நீங்கள் எதற்கு வருகிறீர்கள்? இருப்பவர்களும் வெளியேறுங்கள் என்று சொல்லப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் துலாம் ராசியில் சனி வரும்போது, 27.12.2011க்குப் பிறகு இதுபோன்ற கோஷங்கள், கோரிக்கைகள் இதெல்லாம் உலகெங்கும் அதிகரிக்கும். அதனால் இந்தியா அதற்குத் தயாராக வேண்டும். ஆள்பவர்களும் அதற்குத் தயாராக வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்