இர‌ட்டை‌க் குழ‌ந்தை‌ப் ‌பிற‌ப்பை கணிக்க முடியுமா?

செவ்வாய், 8 ஜூன் 2010 (14:56 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: ஒரு தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதை ஜாதகத்தை வைத்துக் கூற முடியுமா? அவ்வாறெனில், அது எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: ஜாதக அலங்காரம், நந்தி வாக்கியம் இதுபோன்ற நூல்கள் எல்லாவற்றிலும் இரட்டைக் குழந்தைப் பிறப்பிற்கென்றே சில பாடல்கள் பாடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கரு இரட்டையர்கள், அதாவது ஒரு கருவிலேயே இரண்டு குழந்தைகள் பிறகிறார்களே அதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் ஒற்றை ராசி, இரட்டை ராசி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக பார்த்தீர்களென்றால், மிதுனம், துலாம், மீனம் இவையெல்லாம் இரண்டு குறிகள் உள்ளவை. மிதுனம் என்றால் இரட்டையர்கள், இரண்டு சிறுவர்கள் படம் போட்டிருக்கும். துலாம் என்றால் தராசு தட்டு இரண்டு இருக்கும். மீனம் ராசிக்கு எதிரும் புதிரும் இடம் பெற்றிருக்கும் இரண்டு மீன்கள் இருக்கும். இந்த மாதிரியெல்லாம் உண்டு. அடுத்து ஐந்தாம் அதிபதி - அதுதான் குழந்தை ஸ்தானம் - இரட்டை ராசியில் இடம்பெற்றிருந்தாலோ அல்லது வலுவடைந்திருந்தாலோ கணவன் மனைவிக்கு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக இருக்கும்.

அலங்காரத்தில் முன்பே ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அதற்கென்று சில கணக்குகள் உண்டு. எனவே இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதை கணிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்