இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் விவாகரத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

செவ்வாய், 23 மார்ச் 2010 (18:08 IST)
அயல்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள், விவாகரத்து செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அதனால் தம்பதிகள் இடையே மனஸ்தாபம் வந்து விவாகரத்து செய்யும் நிலை ஏற்படுமா? இரட்டைக் குழந்தைகள் பற்றி ஜோதிடத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

பதில்: ஜோதிட ரீதியாக மிதுனம், மீனம், துலாம் ஆகிய ராசிகள், இரட்டைச் சின்னங்கள் உடையவை. மற்ற ராசிக்காரர்களை விட மேற்கூறிய 3 ராசிக்காரர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம். நாம் நடத்திய ஆய்வில் மிதுன ராசிக்கு அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக 5ஆம் வீட்டில் புதன் இருந்து, 5ஆம் அதிபதி, புதன் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஜோதிட ரீதியாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய கிரகமாக புதன் கருதப்படுகிறது. நட்பு பாராட்டும் கிரகமாகவும் திகழ்கிறது.

எனவே, இரட்டைக் குழந்தைகளை உடைய தம்பதிகள் சாதாரண கணவன்-மனைவி போல் இல்லாமல், நட்பு பாராட்டும் காதலர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குடும்பத்தில் புதனின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்றே கருத வேண்டும்.

எனவே, புதன் ஆதிக்கத்திற்கு ஏற்ப தம்பதிகள் இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, பிடிவாத குணத்தைக் கைவிட்டு, நண்பர்கள் போல் வாழ்க்கை நடத்தினால் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த வகையில் அயல்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஜோதிட ரீதியாக ஒத்துப் போகிறது என்றுதான் கூற வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்