திருநள்ளாறு கோயில் சீரமைப்பிற்கு ரூ.146 கோடி ஒதுக்கீடு பலனளிக்குமா?

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (15:39 IST)
திருநள்ளாறு சனி கோயிலை சீரமைக்க ரூ.146 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப்படைக்கும் எனக் கூறியிருந்தீர்கள். மேலும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் சனிப் பெயர்ச்சியால் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்திருந்தீர்கள்.

இத்தருணத்தில் திருநள்ளாறு கோயிலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது சனியால் ஏற்படும் இன்னல்களைக் குறைக்குமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

திருநள்ளாறு கோயிலை சனி பகவான் கோயில் என்று அழைத்தாலும், அங்கு மூலவராக அருள் பாலிப்பது சிவன்தான். அவ‌ர் தர்பாணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தர்பை மீது அமர்ந்து இருப்பதால் அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது.

தர்ப்பைப் புல் ஆன்மிகத்தில் விஷேசமான இடத்தைப் பிடித்துள்ளது. தர்ப்பை மீது அமர்ந்திருக்கும் போது ஒருமுறை அம்மந்திரத்தை கூறினாலே 100 முறை கூறியதற்கான பலன் கிடைக்கும் என்று நூல்கள் கூறுகின்றன.

எந்த சீதோஷ்ண நிலையிலும், உடலை சீரான வெப்ப நிலையில் வைத்திருப்பதும் தர்ப்பையின் தனிச்சிறப்பு. தர்ப்பை ஆசனத்தில் (தர்பாசனம்) அமருவதற்கே தனிச் சக்தி வேண்டும். உடல் நல்ல சூழலில் இருந்து அபாணம், விபாணம் உள்ளிட்ட வாயுக்கள் சரியான பாதையில் பயணித்தால்தான் (பிராணயாமம் செய்பவர்கள்) அதில் அமர வேண்டும். இல்லாவிட்டால் பல உடல் கோளாறுகள் ஏற்படும்.

அவ்வளவு சக்தி வாய்ந்த தர்ப்பாசனத்தின் மீது மூலவரான சிவன் அமர்ந்துள்ளதால் அவர் அதீத சக்தி, ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார். அவருடைய காலடியில் சனி பகவான் இருப்பதால்தான் சனீஸ்வரரின் உக்கிரம் குறைவாக உள்ளது.

திருநள்ளாறில் நள மகா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து தங்களுடைய பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டதுடன், அவர்கள் இழந்ததையும் (நளன் தனது அழகிய உடலை) திரும்பப் பெற்றனர் என்று இதிகாசங்கள் கூறுகிறது. அக்கோயிலில் உள்ள மூலவர் அதீத சக்தி படைத்தவராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற அதிசயங்கள் சாத்தியப்படும்.

அந்த வகையில் பார்க்கும் போது, திருநள்ளாறு கோயிலை ஆகம விதிப்படி புனரமைப்பது நாட்டிற்கு நன்மை அளிக்கக் கூடிய விஷயமே. உண்மையான ஆன்மிகம் தழைக்கும். போலியான ஆன்மிகவாதிகள் பாதிப்பு அடைவர்.

கோயில் சீரமைப்பால் சனி பகவானுக்கு சக்தி அதிகமாகுமா என்ற கோணத்தில் இதனைப் பார்ப்பதைவிட, அவரால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

காரணம் நவகிரகங்களில் சூரியன், சந்திரனுக்கு மட்டும் வக்ர கதி கிடையாது. மற்ற கிரகங்களுக்கு (ராகு, கேது தவிர) வக்ர கதி உண்டு. சனி வக்ரத்தில் உள்ளார் என்றால் அவரால் பாதிப்பு ஏற்படும்.

கோயிலைப் புனரமைப்பதன் மூலம் சனி பகவான் வக்ரத்தில் இருப்பதால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். அவரது ஆற்றல் பெருகும். கோயிலுக்கு செல்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மூலவரும் வலுவடைவதால் இத்தலம் வளர்ச்சி பெறும். கோயிலுக்கு வரும் மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான நிலை ஏற்படும் என்பதால், கோயில் சீரமைக்க நிதி ஒதுக்கியது நிச்சயம் நல்ல பலன்களை அளிக்கும்.