சத்தீஷ்கர், டெல்லி, ம.பி., ஜம்மு, ராஜஸ்தான் தேர்தல்: வெற்றி யாருக்கு?

செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:48 IST)
தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் 5 முக்கிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மத்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

சத்தீஷ்கரில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 5 மாநிலங்களிலும் எந்த அரசியல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தல் தேதி குறித்த தகவலுடன் எமது ஜோதிடர் க.ப.வித்யாதரனிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்:

சத்தீஷ்கரில் நவம்பர் 14, 20ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் (பா.ஜ.க) குறைந்த பெரும்பான்மையுடனோ அல்லது கூட்டணியாகவோ மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 27, 29ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு சாதகமான நிலை காணப்பட்டாலும், தற்போது ஆட்சியில் (பா.ஜ.க) இருப்பவர்களே மீண்டும் நூலிழையில் முன்னணி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளம் வாய்ப்பும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி உடன்பாடுகளும் ஆட்சியாளர்களை நிர்ணயிக்கும்.

தலைநகர் டெல்லியில் நவம்பர் 29ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதன்படி பார்த்தால் 29ஆம் தேதி நண்பகல் வரை காங்கிரசுக்கு சாதகமான நிலையும், அன்று பிற்பகலில் இருந்து பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையும் காணப்படுகிறது.

எனவே அன்று நண்பகல் வரை பதிவாகும் வாக்கு எண்ணிக்கையை வைத்தே அங்கு எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூற முடியும். மேலும் காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் டெல்லியில் இழுபறி நிலையான வெற்றி ஏற்படவும் வாய்ப்புள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது.

ராஜஸ்தானில் டிசம்பர் 4ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு தற்போது பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும். நூலிழையில் பதவியை தக்கவைத்துக் கொள்ளலாம்.

ஜம்மு-காஷ்மீரில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடந்து முடிந்த முதற்கட்டத் தேர்தலில் 55% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதையடுத்து நவம்பர் 23, 30ஆம் தேதிகளிலும், டிசம்பர் 7, 13, 17, 24 தேதிகளிலும் அடுத்த 6 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

நாட்டின் ஈசானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் தற்போது பெரும்பான்மை கிடைக்காது. மேலும் ஆட்சியில் அமரும் கட்சி தனது ஆட்சியில் நீடிப்பது கடினம்.

வெப்துனியாவைப் படிக்கவும்