கூட்டுக் குடும்பம் உடைந்ததற்கு காரணம்? சமூகமா... கிரகங்களா?

வியாழன், 31 ஜனவரி 2008 (16:41 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பை உடைத்தது கிரக அமைப்புதான். எங்களுடைய பார்வையில் எந்த நிகழ்வையும் கிரக அமைப்புகளை வைத்துத்தான் பார்க்கிறோம். வானவியலைப் பார்க்கும்போது செவ்வாய் பூமிக்கு அருகில் வந்து சென்றது. அதில் இருந்துதான் பூமிக்கு வேகம் அதிகரித்தது. எனவே செவ்வாயின் அதிர்வுதான் பூமியை மாற்றியது.

எனவே எந்த நிகழ்வு நடந்தாலும் அது கிரகத்தினால் ஏற்படும் மாற்றம்தான். எல்லா கிரகங்களும் நீள் வட்டப் பாதையில் செல்கின்றன. ஆனால் எப்போதாவது ஒரு கிரகம் பூமிக்கு அருகில் வரும்போது அதன் தாக்கம் பூமியில் இருக்கும். அதாவது சமூக நிலை மாற்றங்கள் ஏற்படும். அது சீர்கேடுகளாகவும் இருக்கலாம், நல்லதாகவும் இருக்கலாம்.

குரு நிதிக்குரியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வால் நட்சத்திரம் ஒன்று குருவை தாக்கியபோது நிதி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது குரு பலமாக இருக்கிறார். குரு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பூராட நட்சத்திரத்திற்கு வந்திருக்கிறார். உடனே வங்கி வேலை நிறுத்தம் நடைபெற்றது. குரு வங்கிகளுக்கும், நிதிக்கும் உரிய கிரகம். அதாவது பூராடம் சுக்ரனுக்குரிய நட்சத்திரம். எனவே பகைக் கிரகத்தின் நட்சத்திரமான பூராடத்தில் குரு பயணிப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

இதுபோன்று சமூக மாற்றங்கள், நிகழ்வுகள் எதையும் கிரகங்களே நிர்வகிக்கின்றன.

தற்போது எந்த குடும்ப முறையை நாம் ஏற்றுக் கொள்வது நல்லது?

செயற்கைக் கோள்களின் ஆதிக்கம், அது வெளியிடும் கழிவுகள், அது சென்று வரும்போது கிரகங்களில் ஏற்படும் சலனம் தான் - அதாவது ஒரு குளத்தில் ஒரு சிறிய கல்லை வீசும்போது அது ஏற்படுத்தும் சலனத்தைப் போன்று - சமூக சீரழிவுகளுக்குக் காரணம். இந்த செயற்கைக் கோள்கள் வெளிப்படுத்தும் கழிவுகள் பூமியில் மட்டுமல்ல கிரகங்களையும் மாசடைய வைத்துவிட்டன. இதனால் சமூக சீரழிவுகள் ஏற்படுகின்றன.

செயற்கைக் கோள்களினால் கூட்டுக் கிரகங்கள் உடைவது, குட்டி கிரகங்கள் உடைவது போன்றவை நிகழும்போது பூமியிலும் அது போன்ற ஒரு நிகழ்வு ஏற்படும்.

இப்போது சனி யுகம் நடக்கிறது. அதாவது சனி என்றால் கலி என்பது பொருள். கலி முற்றிவிட்டது என்றால் அவர்களுக்கு சனி வலுவாகிவிட்டான் என்று அர்த்தம்.

சனி ஒரு முடிவிற்குரிய கிரகம். இந்த யுகமே சனி யுகமாகிவிட்டது.

சனி என்பது தனி நபருக்குரிய கிரகம். அனுசரித்துப் போவது, வளைந்து கொடுத்தல், தன்னைத் தானே தாழ்வாக நினைத்து மற்றவர்களை உயர்வாக நினைத்தல் போன்றவற்றை கொடுப்பது சனியின் குணம். ஆனால் சனி எல்லாக் காலக்கட்டத்திலும் அதுபோன்று அமைவதில்லை. சனி பாவ கிரகங்களுடன் அமரும்போது கூட்டுக் குடும்பத்தை சிதைத்துவிடும் நிலையை ஏற்படுத்தும். அதே சனிதான் தனித்தன்மைக்கும் ஏற்ற கிரகம். குனிய குனிய கொட்டிக் கொண்டே இருந்தால் கொட்டு வாங்கியவன் திடீரென எழுந்தான் என்று சொல்வார்கள்.

அதுபோல கூட்டுக் குடும்பங்களில் நாம் அணுசரணையாக இருந்தாலும் பெரியவர்கள் சரியில்லாமல் போனாலும் பிரிவதற்கு வாய்ப்பு உண்டு. சனி பாசிடிவாக இருக்கும்போது கூட்டுக் குடும்ப எண்ணிக்கை அதிகரிக்கும். சனி நெகடிவாக இருக்கும்போது கூட்டுக் குடும்ப முறைகள் குறையும். தற்போது சனி நெகடிவ் வழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எத்தனை காலத்திற்கு இது நீடிக்கும்?

சுமார் 10 வருடங்களுக்கு இந்த நிலைதான் நீடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்