இந்திய, உலக பொருளாதாரம் எப்படி இருக்கும்?

செப்டம்பரின் மத்திய பகுதி இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல உலக முதலீட்டாளர்களையே கதிகலங்க வைத்து விட்டது. வங்கித்துறையில் ஜாம்பவான்களாக கருதப்பட்ட அமெரிக்காவின் லீமென் பிரதர்ஸ் வங்கி, மெரில் லின்ச் ஆகியவை தங்களால் இனி வியாபாரம் செய்ய முடியாது என படுத்துவிட்டன.

இதனால் அமெரிக்க பங்குச்சந்தை வால்ஸ்ட்ரீட் அதள பாதாளத்திற்கு சென்றது. இந்தியாவிலும் அதன் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,500 புள்ளிகள் வரை மூன்று நாட்களுக்குக்குள் சரிந்தது. இதே நிலை இனி அடுத்தடுத்த மாதங்களிலும் தொடருமா? அல்லது சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளால் உலக பொருளாதாரமும், இந்திய பங்குச்சந்தையும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

குருதான் பணத்திற்கு உரிய கிரகம். குறிப்பாக வங்கிகள் அனைத்தும் குருவின் ஆதிக்கத்தின் கீழ் வரும். இப்போது குரு தனது வீடான தனுசுவில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ஆனால் பகைக் கோளான சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு அமர்ந்துள்ளார்.

வரும் 6-12-2008 முதல் 2009ஆம் ஆண்டு முழுவதுமாக குரு நீச்சமடைகிறார். அந்தக் காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பலத்த பின்னடைவு ஏற்படும். பல வங்கிகள் மூடப்படும் அல்லது மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இதே மாதிரி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரி கிரக அமைப்புகள் வந்த போது மகரத்தில் குரு நீச்சமானது. அப்போதும் இதே போன்று கடும் பண நெருக்கடி, பொருளாதார சரிவு (பல சீட்டு நிறுவனங்கள் மோசடி) ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அரசு வங்கிகளில் முதலீடு செய்வது நல்லது!

போட்டி போட்டிக் கொண்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் 6-12-2008 முதல் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும். நிலம், கட்டிடங்கள் விலைகளும் வீழ்ச்சியடையும். ஆனால் 2010இல் மறுபடியும் இவற்றின் விலை அதிரடியாக உயரும். எனவே நிலம், வீடு வாங்க நினைப்பவர்கள் 2009 நிறைவுக்குள் வாங்குவது பொருளாதார ரீதியாக சிறந்ததாக அமையும்.

அதே போல் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், அதனை வாங்க நினைப்பவர்களும் 2009 இறுதிக்குள் வாங்கலாம். 2010 முதல் இவற்றின் விலையும் விண்ணை முட்டும்.

மேலும் வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், முதலீடு செய்யப் போகும் நண்பர்கள் தரமான அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பை அளிக்கும். அரசு வங்கிகள் சிறந்தது. தனியார் வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்கள் அவற்றை அரசு வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்