அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையம் - நீதிமன்றத்தில் வெளிவந்த உண்மை

வியாழன், 2 ஜூன் 2016 (15:24 IST)
தேர்தலின் போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் அதிகாரம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தமிழகம் முழுக்க 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக கூறி தேர்தலை மே 23 ஆம் தேதி தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம்.
 
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுத்த திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் வாதிட்டார்.
 
மேலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே  வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
 
எனவே, இது குறித்த சட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசுக்கும், சட்ட கமிஷனுக்கும் தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்