இந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர்களும், பெற்றோர்களும் ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என கூறுகின்றனர். ஆனால் ராம்குமார் தான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே தடயங்களும், சாட்சிகளும் உள்ளதாக காவல்துறை கூறுகிறது. ரத்தக்கறை படிந்த ராம்குமாரின் சட்டை அவரது அறையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. சட்டையில் படிந்துள்ள ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றுதான் என்று தடய அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையை தடய அறிவியல் துறையினர் சமர்ப்பிக்க உள்ளனர்.
சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது செல்போனை காணவில்லை. அந்த செல்போன் ராம்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் ராம்குமார், சுவாதியை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளில் அவரது கைரேகை பதிவாகி உள்ளது.