சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கான தேசிய விருது, குழந்தைகளின் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கான ராஜூவ் காந்தி மானவ் சேவா விருது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15ஆம் தேதி ஆகும்.
இது தொடர்பாக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக 2009ஆம் ஆண்டிற்கான கீழ்க்கண்ட தேசிய விருதுகளை அறிவித்துள்ளது.
சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கான தேசிய விருது, ஒரு மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு என்ற அடிப்படையில் அவர்களின் கல்வி, கலை, பண்பாடு, விளையாட்டு போன்ற துறைகளில் செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருது பெற 4 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1.1.1994 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்த குழந்தைகளாக இருக்க வேண்டும்.
ராஜூவ் காந்தி மானவ் சேவா விருது, குழந்தைகள் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த தனிநபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. இந்த விருது பெற குழந்தைகள் நலனுக்காக 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து இருக்க வேண்டும். தேசிய அளவில் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் நல சேவைக்கான தேசிய விருது, (National Award for Child Welfare 2009) குழந்தைகளின் நலனுக்காக சிறந்த சேவையாற்றும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. தேசிய அளவில் மூன்று தனிநபர்கள் மற்றும் ஐந்து நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநில அரசின் பரிந்துரைகளை இறுதி செய்து மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் இயங்கும் நிறுவனங்கள் ஆகியனவற்றிலிருந்து மேற்கண்ட விருதினைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட முகவரியில் இயங்கும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி : துணை இயக்குநர் (மகளிர் மற்றம் குழந்தைகள் நலம்), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, எண்.50, சித்தன்குடி மெயின் ரோடு, புதுச்சேரி - 605 013.
காரைக்கால் : குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, பெருந்தலைவர் காமராஜர் அலுவலக வளாகம், காரைக்கால்.
மாஹே : நல அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மாஹே.
ஏனாம் : நல அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஏனாம்.
விண்ணப்பப்படிவங்களை புதுச்சேரி அரசின் இணைய தளத்தில் http: //www.pon.nic.in/ என்ற முகவரியிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.06.2009 ஆகும்.