'நான் அவனில்லை' பட பாணியில் 6 திருமணம் செய்ய முயற்சிக்கும் பலே ஆசாமி

செவ்வாய், 11 மார்ச் 2014 (11:30 IST)
FILE
பெண்ணை 5வதாக திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார் அளித்தார்.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் நதிராபானு (25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 5வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.

எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர். 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது‘‘ என்றார். தற்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். எனவே அவர் மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்