தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்கு முன்பு அங்குள்ள தமிழர்களின் உயிரைக் காக்க தி.மு.க தலைவர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலார் தா. பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளத்தில் அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போது சிறுவாணி திட்டம் கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளாக எந்த சச்சரவும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரள அரசு அணை கட்ட முயற்சி எடுத்துள்ளது.
இந்த அணையில் நான்கு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் கோவைக்கு குடிநீர் கிடைக்காது. தொழில் நகரமான கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரத்தை அது பாதிக்கும். எனவே இந்த முயற்சியை கேரள அரசு கைவிட வேண்டும் . இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் இந்தியாவுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என இலங்கை அரசு கூறி வருகிறது. இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்த இந்தியாவுக்கு இலங்கை நெருக்கடி கொடுக்கும வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கையின் சுயரூபத்தை இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
2009 மே 17ம் தேதியுடன் உள்நாட்டுப் போர் முடிவுற்றதாக இலங்கை அரசு கூறினாலும், இன்று வரை ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களில்தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ் ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்கு முன்பு அங்குள்ள தமிழர்களின் உயிரைக் காக்க திமுக தலைவர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று தா.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.