ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை அ.இ.அ.தி.மு.க. அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதற்கான சட்ட திருத்தமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி மேல்முறையீடு செய்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சார்பிலும், எதிர்ப்பு தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில், கடந்த 2 வாரங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 4ஆம் தேதியுடன் இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.