காங்கிரஸ்-தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை: கருணாநிதி
வியாழன், 23 ஜூன் 2011 (08:48 IST)
''காங்கிரஸ் - தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை'' என்று டெல்லியில் இருந்து திரும்பிய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
டெல்லியில் கனிமொழியைச் சந்தித்துவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய அவர் சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி - பதில் வருமாறு:
டெல்லியில் கனிமொழியைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்?
திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாற்று இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார், ராஜா போன்றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.
கனிமொழியின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள்?
அதைப் பற்றித்தான் வழக்கறிஞர்களிடம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கனிமொழியின் நிலையைப் பார்க்கும்போது, ஊடகங்களைத் தவிர்த்து அதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கேட்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் லோக் பால் மசோதா பற்றி தி.மு.க. நிலைப்பாடு என்ன?
ஏற்கனவே தி.மு.கழக ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோதே, இதுபோன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்புச் சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில் முதலமைச்சரையும் இணைத்து, முதலமைச்சர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாற்றலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அதுதான் தி.மு.க. நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.
தாங்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டியதையொட்டி இன்றைய தினம் தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை நீதிபதி தங்கராஜை கொண்டு அமைத்திருக்கிறார்களே, அதைப் பற்றி?
எந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த பிறகு சொல்கிறேன்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதலமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உங்களுடைய கருத்தா?
உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதலமைச்சரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
அன்னா ஹசாரே நடத்துகின்ற போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன் தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறுகின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் எப்போது?
ஜூலையில் தேதி இன்னும் நிச்சயமாகவில்லை.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கு மேலும் வாய்ப்பு இருக்குமா?
எனக்குத் தெரியாது.
காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.
அப்படியென்றால் பிரச்சனை இருக்கறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
எந்த பிரச்சனையும் இல்லை.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?
யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி தான் நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகாரபூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை.