மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் முதலில் உங்களுடன் தான் பேச முடிவு செய்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ரஜினிகாந்த், தான் தற்போது சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தவுடன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தான் முதலில் பேச வேண்டும் என்று முடிவு செய்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவும், ரஜினிகாந்தின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதாகவும், அவர் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்து கொண்டார்.
முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு, தான் இன்னும் ஒன்றரை மாதத்தில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
லதா ரஜினிகாந்தும், முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு, சென்னையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதலமைச்சர் நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.