இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு உள்ளது கருணாநிதியின் குடும்ப சொத்துக்கள்: ஜெயலலிதா குற்றச்சாற்று
சனி, 29 ஜனவரி 2011 (15:50 IST)
''இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை உலக அளவில் வாங்கி குவித்துள்ளனர்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'அரைத்த மாவையே அரைத்தது போல’ என்ற பழமொழிக்கேற்ப சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்கிறார் கருணாநிதி. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், பத்தாயிரம் பேருக்கு மேல் நிற்க முடியாத ஓர் அரங்கத்தில், லட்சோப லட்சம் மக்கள் கூடியிருக்கிறீர்கள் என்று ஒருவர் குறிப்பிட்டதாகவும், இப்படித்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் லட்சம், ஆயிரம், கோடி ஊழல் என்று உத்தேசமாக எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
ஊழலே நடக்கவில்லை என்று முதலில் கூறிய கருணாநிதி, தன்னுடைய இந்த அறிக்கையின் மூலம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து இருக்கிறது என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பே இல்லை என்று கபில் சிபல் திட்டவட்டமாக கூறியதை குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இவ்வாறு கூறியதற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!
மூன்றாவதாக, தொலைத்தொடர்புத் துறையிலே மக்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று கருதி தான் முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது என்ற அடிப்படையை ராசா பின்பற்றியது போல கூறி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
ஸ்வான் டெலிகாம், யுனிடெக், லூப் டெலிகாம், அலையன்ஸ் இன்ப்ரா போன்ற தகுதியில்லாத கம்பெனிகள் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராசாவின் தயவால் பெற்றன. உரிமங்களை பெற்ற நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை சில நாட்களுக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன.
உதாரணமாக 1,650 கோடி ரூபாய் கொடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்ற யுனிடெக் நிறுவனம், ஒரு சில நாட்களிலேயே தனது 60 விழுக்காடு பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலினார் நிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறது. இதே போன்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்திற்கு 4,500 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறது. மேற்படி லெட்டர் பேடு கம்பெனிகள் அடைந்த லாபத்தை மக்களுக்கு கிடைத்த சலுகை என்கிறாரா கருணாநிதி?
ராசாவால் பயனடைந்த பெரும்பாலான நிறுவனங்கள் இன்னமும் சேவையை தொடங்கவே இல்லை. இப்படி இருக்கும்போது மக்களுக்கு என்ன சலுகை கிடைத்து இருக்கும் என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், “முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது” என்ற கொள்கையைக் கூட ராசா கடைபிடிக்கவில்லை. இந்தக் கொள்கையை முறையாக ராசா கடைபிடித்து இருந்தால், 2006 முதல் 2008 வரை பெற்ற விண்ணப்பங்களை முதலில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், தான் சார்ந்த கட்சியின் தலைவரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் குளிர வைப்பதற்காக, உரிமம் வாங்குவதற்குரிய தகுதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “முதலில் தந்தவருக்கு முதலில் வழங்குவது” என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்று இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாயை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு திருப்பிவிட்டு இருக்கிறார்.
ராசாவின் தவறான கொள்கை காரணமாக பயனடைந்தவர்கள் பொதுமக்கள் அல்ல; கருணாநிதியின் குடும்ப மக்கள் தான். “மக்கள் நல அரசு என்கிற போது அந்த அரசு வணிக நோக்கத்தோடு, லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது; சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர, நிதி இழப்பு - மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நடைபெறுவது நல்லதல்ல” என்று கருணாநிதி கூறி இருக்கிறார்.
அரசு வணிக நோக்கோடு, லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் போது, அதன் மூலம் அரசுக்கு வரும் பணம் பொதுமக்களுக்காக, அதாவது சமூக நன்மைக்காக பயன்படும். கருணாநிதி சொல்வது போல் ஒரு அரசு செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் பயனடையும். ‘தன்’ சமூகத்தை மனதில் வைத்து கருணாநிதி இது போன்ற கருத்தைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கருணாநிதி சொல்வது போல் மத்திய அரசு செயல்பட்டதன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்தபடியாக, கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், தொடக்கத்தில் செல்போன்களை ஒருவர் பயன்படுத்தினால் அழைப்பவர் 16 ரூபாய் கட்ட வேண்டும், அழைக்கப்பட்டவர் 8 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இப்போது ஒரு நிமிடம் பேசினால் 40 காசு, 30 காசு என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறி இருக்கிறார்.
FILE
பொதுவாக, ஒரு பொருளை அதிக நபர்கள் பயன்படுத்தும்போது அதன் விலை தானாகவே குறைவதும்; தாங்கள் தயாரிக்கும் பொருள்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விலையை நிறுவனங்களே குறைப்பதும் தான் வணிகம், வியாபாரம் என்பது கருணாநிதிக்கு தெரியாது போலும்! உதாரணமாக, கணினி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு இருந்தது. இன்று, 10,000 ரூபாய், 15,000 ரூபாய்க்கெல்லாம் கணினி கிடைக்கிறது. அதன் காரணமாக கணினியை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் செல்போன் கட்டணமும் குறைந்திருக்கிறது.
ஆனால், இந்த செல்போன் நிறுவனங்கள் எல்லாம் 2004 ஆம் ஆண்டிற்கு முன்பு உரிமங்களை பெற்றவை. ராசாவால் அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்கப்பட்ட கம்பெனிகளால் மக்களுக்கு இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதையும், பெரும்பாலான கம்பெனிகள் தங்கள் சேவையை இன்னமும் துவங்கவே இல்லை என்பதையும் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
செல்போன் உபயோகிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் செல்போன் நிறுவனங்கள் பெறும் வருவாய் மாதம் ஒன்றுக்கு 340 ரூபாய் என்று இருந்ததிலிருந்து 120 ரூபாயாக குறைந்துவிட்டதாக கருணாநிதி வருத்தப்பட்டு இருக்கிறார். 40 லட்சம் பேர் செல்போனை பயன்படுத்திய போது செல்போன் ஒன்றுக்கு மாதம் 340 ரூபாய் வருமானம் செல்போன் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. இன்று 73 கோடி பேர் செல்போன் உபயோகிக்கும் நிலையில் செல்போன் நிறுவனங்களின் மொத்த வருமானம் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதை கருணாநிதி கணக்குப் போட மறந்துவிட்டார்.
செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்துவிட்டதற்காக குரல் கொடுக்கும் ஒரே முதலமைச்சர் கருணாநிதி தான். கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி. மக்கள் என்றால் ‘கணக்குப் போடுவதும்’; தனியார் நிறுவனங்கள் என்றால் ‘கணக்கு பண்ணுவதும்’ கருணாநிதிக்கு கைவந்த கலை! கடைசியாக, கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் “ஏலம் விடத் தேவையில்லை” என்று டிராய் கூறியதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
FILE
‘டிராய்’ அமைப்பு தனது 2003ஆம் ஆண்டு பரிந்துரையில், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசு விரும்பினால், அதனை ஏல முறையில் வழங்கலாம் என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது. டிராயின் இந்தப் பரிந்துரை மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை ஏன் ராசா பின்பற்றவில்லை மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பரிந்துரையை மீறி ஒரு மத்திய அமைச்சர் செயல்பட வேண்டுமானால், அதற்கு மீண்டும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ராசாவின் அத்துமீறிய செயலுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதா?
28.8.2007 தேதியிட்ட தனது பரிந்துரையில் 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிம விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவித்து, அதற்கான வழிமுறையை ஆராயுமாறு டிராய் தெரிவித்தது. டிராயின் இந்த பரிந்துரையை ராசா பின்பற்றினாரா? டிராய் அமைப்பு தன்னுடைய 2007 ஆம் ஆண்டு பரிந்துரையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விண்ணப்பங்களை பெறுவதில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டது. ஆனால் இதை மீறி, 1.10.2007 வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று 24.9.2007 அன்று ஏன் பத்திரிகைச் செய்தி தரப்பட்டது? பின்னர் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி 25.9.2007 என்று ராசாவால் ஏன் மாற்றி அமைக்கப்பட்டது?
2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அதிகாரம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்பலாம் என்ற 1.11.2007 ஆம் நாளைய சட்ட அமைச்சரின் பரிந்துரையை ராசா ஏன் நிராகரித்தார்? 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை ஏலத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற பாரதப் பிரதமரின் அறிவுரை ராசாவால் ஏன் பின்பற்றப்படவில்லை?சந்தை நிலையை அடிப்படையாக வைத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற முன்னாள் நிதிச் செயலாளர், தற்போதைய பாரத ரிசர்வ் வங்கி கவர்னரின் கருத்து ராசாவால் ஏன் ஏற்கப்படவில்லை?
ஏலத்தின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் திரு. மாதூர் மற்றும் உறுப்பினர் (நிதி) திருமதி மஞ்சு மாதவன் ஆகியோரின் கோரிக்கை ராசாவால் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் என்ன?
FILE
ஆம் ஆண்டு 40 லட்சமாக இருந்த மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 40 கோடியாக ஆகிவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டு விலைக்கே ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவசரஅவசரமாக 122 விண்ணப்பதாரர்களுக்கு 10.1.2008 அன்று ஒரே மணி நேரத்தில் ராசாவால் ஏன் கொடுக்கப்பட்டது?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்து இருப்பதனால் தான் தகுதியில்லாமல் உரிமங்களை பெற்ற நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உண்மையை முழுவதுமாக மறைத்து, சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளினால், இந்திய நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு. ஆனால், இதன் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் உலக அளவில் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு. இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை உலக அளவில் வாங்கி குவித்துள்ளனர். கருணாநிதியை சந்தித்துவிட்டுச் சென்ற மறுநாளே மத்திய நிதி அமைச்சர் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பண விவரங்களை வெளியிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.