கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பு
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:21 IST)
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
திண்டிவனத்தில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்ததையடுத்து மரக்காணம் செல்லும் சாலையில் 10 ஆயிரம் கிலோவாட் மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
மழை பெய்துக் கொண்டிருந்தபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து இடிபோன்று பயங்கர சத்தம் எழுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு திண்டிவனம் நகரம் மற்றும் கிளியனூர், தீரனூர், ஊரல்பட்டினம், வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
நிகழ்விடத்திற்கு மின்துறை பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கல்வலிகிழங்கு செடிகள் அழுகி நாசமடைந்தன.
கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 12 பேர் மழையால் இறந்துவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகி விட்டன. 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிறைந்து வழிகிறது. மதுதம்மா அணையில் நீர்மட்டம் முழுகொள்ளவான 66 அடி நிரம்பி உபரி நீர் 852 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
இதேபோன்று பாலாறு, பொருந்தாறு குதிரையாறு அணைகளிலும் நீர்மட்டம் முழு கொள்ளளவைஎட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.