15 வயதுக்கு உட்பட்ட 9 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சர்வதேச காவல்துறையால் தேடப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) என்பவர் புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். இவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டு அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 15 வயதுக்கு உட்பட்ட 9 சிறுமிகளை எரிக் மார்டின் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இது தொடர்பாக பிரான்ஸ் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
அப்போது, பிணையில் வெளியே வந்த அவர் நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இந்த சூழ்நிலையில், அவர் மீது நடைபெற்று வந்த வழக்கில் பிரான்ஸ் நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நேபாளத்தில் சுமார் ஒரு வருடம் தங்கி இருந்த அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இந்தியாவில் உத்ராஞ்சல், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த மார்டின், மாதவரம் நடேசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்.
இந்த நிலையில், எரிக் மார்டினை கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவியை பிரான்ஸ் காவல்துறை நாடியது. இது தொடர்பாக சர்வதேச காவல்துறையினர் விசாரித்தபோது, எரிக் மார்டின் இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது. சென்னையில் இருக்கும் அவரை கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளர் சம்பத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று எழும்பூருக்கு வந்த, எரிக் மார்டினை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரை அழைத்துக் கொண்டு காவல்துறையினர் அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவை தொலைந்து விட்டதாக கடந்த 2006ஆம் ஆண்டில் அவர் உத்ராஞ்சல் காவல்துறையினர் புகார் செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும், பிரான்சில் இருக்கும் அவருடைய தந்தை செலவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வருவதையும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள மார்டினிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.