ராசாவை பதவி நீக்க வேண்டும்: தா. பாண்டியன் வலியுறுத்தல்
ஞாயிறு, 9 மே 2010 (08:57 IST)
டெல்லியில் பத்திரிகையாளரை தாக்கியதாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கூறினார்.
நெல்லை மாவட்ட் அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை மத்திய அமைச்சர் ஆ. ராசா தாக்கியதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கண்ணியம் காக்க தவறிவிட்டார் என ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து கருணாநிதி விலகச் சொல்ல வேண்டும்.
இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்கள் இன்னமும் சித்ரவதை முகாம்களில்தான் உள்ளனர். அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளுடன் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்றார் பாண்டியன்.
தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த தா. பாண்டியன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்றார்.