புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு ஓமந்தூரார் பெயர்: கருணாநிதி

புதன், 24 ஜூன் 2009 (09:16 IST)
புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழக சட்டமன்ற கட்டட வளாகத்திற்கு ஓமந்தூரார் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், "புதிய கல்லூரிகள் தொடங்குவதைவிட இருக்கிற கல்லூரிகளை தரமாக்க வேண்டும். தனியார் கலைக்கல்லூரிகளில் பயின்று வருபவர்களுக்கு அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அதை தொடர்ந்து வழங்க வேண்டும். தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி தொடங்க வ.உ.சி. அறக்கட்டளை 25 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. அந்த புதிய கல்லூரிக்கு வ.உ.சி. பெயரை வைக்க வேண்டும். கன்னியாகுமரியில் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிக்கு மார்ஷல் நேசமணி பெயரையும் வைக்க வேண்டும்" என்றார்.

அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, "வ.உ.சி. இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்று தேடித்தேடி அலைந்து 1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. தான் கோவை சிறையில் அந்த செக்கு இருக்கிறது என்று கண்டுபிடித்தது. அதை சென்னைக்கு கொண்டு வந்து நினைவு சின்னமாக வைத்தோம். எனவே தூத்துக்குடி பொறியியல் கல்லூரிக்கு வ.உ.சி. பெயரை வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதேபோன்று புதிதாக கட்டப்பட்டு வரும் சட்டமன்ற வளாகத்திற்கும் ஓமந்தூரார் பெயரை வைத்துள்ளோம். தேசிய தலைவர்களுக்கு சிறப்பு செய்வதில் இந்த அரசு சளைத்ததல்ல. காங்கிரஸ் கட்சியின் இதை மறந்துவிடக்கூடாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்