இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நடைபெறும் மாணவர்கள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது: ராமதாஸ்
இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் மாணவ- மாணவிகள் நடத்தும் போராட்டம் முக்கியவத்தும் வாய்ந்தது என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அற வழியில் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று இனவெறி சிங்கள அரசு கொடூரத்தின் உச்சிக்குச் சென்று முப்படைகளையும் கொண்டு பச்சிளங் குழந்தைகள், பெண்கள் அனைவரையும் படுகொலை செய்து விட்டு, வீடுகள், மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தையும் தரைமட்டம் ஆக்கி வருகிறது. இந்தக் கொடூர செயலை தடுத்து நிறுத்தும் வண்ணமாக இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்.
அங்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், வணிக அமைப்புகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மாணவர்களும் தங்களுக்கு உள்ள உணர்வை வெளிப்படுத்த அறவழியில் அமைதி வழியில் வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அமைதி முறையில் போராட்டம் நடத்துகின்றனர். மாணவர் -மாணவிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ- மாணவிகள் அறவழியில் 22, 23ஆம் தேதிகளில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவர் சங்கங்கள் அறிவித்து உள்ளன. இந்த மாணவர் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் ஆதரவு உண்டு. அமைதி வழியில், அற வழியில் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.