தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை அவைத் தலைவர் ஆவுடையப்பன், சட்ட மன்ற செயலர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் பர்னாலா உரையாற்ற தயாரானார். அப்போது, சட்டப்பேரவை அ.இ.அ.தி.மு.க., துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து சில கருத்துக்களை கூறினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். அவருடன் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களை தொடர்ந்து ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமங்கலம் தொகுதியில் காவல்துறை துணையோடு சில முறைகேடுகளை செய்தனர். அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டது. பணத்தின் மூலம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்கையான முடிவு அறிவிக்கப்பட்டது என்றார்.
மேலும் தமிழகத்தில் விலை வாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என குற்றம்சாற்றிய பன்னீர் செல்வம், மின்வெட்டுக்கு தீர்வு இல்லை. தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உரத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவை ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், தீவிரவாத செயல்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியான நிலையில் இல்லை. இவற்றை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.