ரூ.1,655 கோடியில் உருவாகும் துறைமுகம்-மதுரவாயல் சாலைக்கு பிரதமர் மன்மோகன்சிங் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் ரூ.1,655 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரவாயல் சந்திப்பில் இன்று நடந்தது. விழாவுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர்மட்ட மேம்பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த மின்னல் வேக விரைவுச்சாலை, 19.012 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. எனவே, இந்தியாவின் மிகப்பெரிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலையாக இது விளங்கும். இந்த விரைவுச் சாலை கட்டுமானத்துக்காக ரூ.1,345 கோடியும், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.310 கோடியும் செலவு செய்யப்படுகிறது. மொத்தம் ரூ.1655 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
விரைவுச் சாலை கட்டுமான பணிக்கான செலவை தமிழக அரசு, சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை பகிர்ந்துகொள்கின்றன. கட்டுமான பணியை டெல்லியைச் சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் மேற்கொள்கிறது. கட்டுமானத்துக்கு 3 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
19 கிலோ மீட்டர் விரைவுச் சாலையும் தரையில் இருந்து உயர்த்தப்பட்ட நிலையிலேயே கட்டப்படும். போர் நினைவு சின்னம் இருக்கும் பகுதியில் துறைமுகத்துக்கு உட்பட்ட இடத்தில் இருந்து இந்த சாலை தொடங்கும். அங்கிருந்து கோயம்பேடு வரை கூவம் ஓடும் வழிக்கு மேலாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை அங்குள்ள என்.எச்.4 நெடுஞ்சாலை மேலாகவும் இந்த விரைவுச் சாலை கட்டப்படும்.
விரைவுச் சாலைக்குள் நுழைவதற்காக 3 இடங்களில் நுழைவுப் பாதைகளும், 3 இடங்களில் வெளிச் செல்லும் பாதைகளும் அமைக்கப்படுகின்றன. நுழைவுப் பாதைகள் சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலும், காமராஜர் சாலை, ஸ்பர்டாங் சாலை மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் வெளிச் செல்லும் பாதைகளும் அமைக்கப்படுகின்றன.