இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி கோவை ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

சனி, 20 டிசம்பர் 2008 (11:08 IST)
ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய சினிமா இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக‌த் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இம்மாதம் 31ஆம் தேதிவரை காவலில் வைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பாக கடந்த 14ஆ‌ம் தேதி ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொதுகூட்டம் நடந்தது. இந்த பொதுகூட்டத்தில் திரைப்பட இயக்குனர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை விமர்சித்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மொடக்குறிச்சி காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஆர்.எம்.பழனிச்சாமி ஈரோடு டவு‌ன் மாவ‌ட்ட காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் (டி.எஸ்.பி.) தனபாலிடம் புகார் கொடுத்தார்.

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுவும் தமிழக முதல்வரை சந்தித்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுதார். இதையடுத்து திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார்.

இதன்படி இயக்குனர் சீமான் தேனி மாவட்டம் படபிடிப்பில் இருந்தபோதும், மணியரசன் சென்னை அலுவலகத்தில் இருந்தபோதும் கொளத்தூர் மணி அவர் வீட்டில் இருந்தபோதும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 505 ( பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 13(1)(பி) (இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுவது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட மூ‌ன்று பேரையு‌ம் ஈரோடு நீதிமன்ற ‌நீ‌திப‌தி அசோகன் மு‌ன்‌னிலை‌யி‌ல் கா‌வ‌ல்துறை‌யி‌‌ர் ஆஜ‌ர்படு‌த்‌தின‌ர். அ‌ப்போது, மூ‌ன்று பேரையு‌ம் வரு‌ம் 31ஆ‌ம் தேதி வரை காவ‌லி‌ல் வை‌க்க உத்தரவிட்டார். இவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சியினர் காவ‌ல்துறை‌யினரு‌க்கு எதிராக கோஷமிட்டனர். பின் வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது. இது குறித்து 18 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நேற்று இரவு ஈரோடு நீதிமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு பகுதியில் மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல‌ர்க‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்