ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய், 8 மே 2012 (15:16 IST)
அரசுக்கு உச்சநீதிமன்றம்!
சிறுபான்மை இனத்தவர்களை கவருவதற்காக ஹஜ் பயணத்தை மத்திய அரசு அரசியலாக்கிவிட்டது.
ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை, 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும்.

இந்த ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக மத்திய அரசு மானிய உதவி அளித்து வருகிறது. அரசு ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் சேவைகளில் செல்பவர்களுக்கு இந்த உதவி கிடைக்காது.

இதற்கிடையில், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு பல இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து, 10 ஆண்டுகளுக்குள் அதனை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிறுபான்மை இனத்தவர்களை கவருவதற்காக ஹஜ் பயணத்தை மத்திய அரசு அரசியலாக்கிவிட்டது என்று கூறிய நீதிமன்றம், புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்குவது சரியானதல்ல என்றும் கூறி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்திய ஹஜ் கமிட்டி செயல்படும் விதம் குறித்தும் புனிதப் பயணத்திற்கு யாத்திரிகர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை பற்றியும் உச்சநீதிமன்றம் கூர்ந்து கவனிக்கும் என்று கூறியுள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் புரிகையில், வழிகாட்டுதல்கள் உள்ளன எனவே வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் ஹஜ் பயண மானியம் கிடைக்குமாறு வடிவமைத்துள்ளோம் என்றார்.

மேலும் இதுவரை ஹஜ் செல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் புதிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய ஆரசு தன் வாக்குமூலத்தில் தெரிவித்தது.

2012ஆம் ஆண்டு எவ்வளவு தொகை மாநியமாக அளிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு வெளியிடவில்லை.

நன்னம்பிக்கைக் குழுக்களை அனுப்புவது முற்றிலும் தேவையற்ற ஒன்று. 9 அல்லது 10 நபர்கள் இந்தப் பெயரில் செல்வதும் கூட தேவையற்றது எனவே இதனை முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என்று கூறினர் நீதிபதிகள்.

மேலும் புனிதப் பயணங்களுக்க்கு அரசு மானியம் வழங்குவது மோசமான சமயச் செயல்பாடாகும் என்று வர்ணித்துள்ளது உச்சநீதிமன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்