ஜார்க்கண்டில் 4ஆம் கட்ட தேர்தல்: பாதுகாப்புக்கு அரசு உறுதி

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:59 IST)
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் 4ஆவது கட்டமாக சனிக்கிழமையன்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 3 கட்ட தேர்தல்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ள நிலையில், நாளைய வாக்குப்பதிவின் போதும், அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 53.1, 58.8, 57.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஜனநாயகத்தின் அடிப்படையை நிலைநிறுத்தும் வகையில், உரிய பாதுகாப்பை அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், எனவே வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டுமாறும் ப. சிதம்பரம் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்