3ஜி அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் : ஆ. ராசா
சனி, 10 ஜனவரி 2009 (13:46 IST)
அதிநவீன மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அயல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டில், அமெரிக்க இந்தியர்கள் கருத்துப் பகிர்வில் பேசிய அவர், இந்த ஏலம் விடும் பணியில் நிபுணர் முகமையின் ஆலோசனை நாடப்படும் என்றார்.
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு மூன்றாம் தலைமுறை அலைவரிசையும், அகண்ட அலைவரிசையும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும், இந்த வாய்ப்பை அயல்நாடுவாழ் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அரசு அண்மையில் அறிவித்த செமிகன்டக்டர் கொள்கை பற்றி குறிப்பிட்ட ராசா, இதுவரை இத்திட்டத்திற்கு 17 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், சுமார் 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.