கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டிடம்: முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (19:09 IST)
இந்திய கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி. விஜயன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டா‌‌க்ட‌ர் ‌பி. ‌விஜய‌ன் கூ‌றியதாவது:

தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் செம்மஞ்சேரியில் ஒ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பில் 100 ஏக்கரில் அமையவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் ரூ.245 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த பல்கலைக்கழகத்திற்காக மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களின் வளாகங்களும் அமைக்கப்படவுள்ளன.

ஆரம்பத்தில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் 8 துறைகள் துவக்கப்படவுள்ளன. 1. துறைமுக நிர்வாகம் 2. கடல்மைல் அறிவியல் 3. கடல்சார் பொறியியல் 4. வர்த்தக பள்ளி 5. கடல்சார் அறிவியல் 6. கடல் துறை சட்டங்கள் 7. கப்பல் வடிவமைப்பு மற்றும் கப்பல் கட்டுதல் 8. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவையாகும். இந்தத் துறைகள் மூலம் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படவுள்ளது.

தற்போது இந்த தேசிய கடல்சார் மையம் அளித்து வரும் துறைமுகம் மற்றும் கடல் சார்பான குறுகிய கால படிப்புகள், கடல் மைல் அறிவியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய பிரிவுகளில் பட்டப் படிப்புகள் இனிமேல் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

இதுதவிர பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக சீனாவில் உள்ள பாலிடன் கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து துறைமுக நிர்வாகத்தில் எம்.பி.ஏ. பட்டமும், பெல்ஜியம் ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகம், சீனாவின் ஷங்காய் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை படிப்பில் எம்.பி.ஏ., மால்டா பல்கலைக்கழகத்தின் சர்வதேச கடல்சார் சட்ட நிறுவனத்துடன் இணைந்து கடல்சார் சட்டத்தில் இளங்கலை படிப்பும், நெதர்லாந்து டெல்பிட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தூர்வாருதலில் இளங்கலை படிப்பு ஆகியவையும் வழங்கப்படவுள்ளன.

இதுதவிர பெங்களூரூ ஐ.ஐ.எம். உடன் இணைந்து முதுநிலை கடலோர அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்பும், ஐ.ஐ.எம். அகமதாபாத்துடன் இணைந்து கடல்சார் நிர்வாகத்தில் (அதிவிரைவு) எம்.பி.ஏ. பட்டமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிர்வாகக் குழு அமைப்பது, பாடத்திட்டங்கள் இறுதி செய்வது, மாணவர் சேர்க்கைக்கான விதிமுறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணிகள் வரும் கல்வியாண்டிலேயே துவங்கிவிடும். மாணவர் சேர்க்கையில் அரசின் ஒதுக்கீட்டு வழிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

செம்மஞ்சேரியில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பில் பல்கலைக்கழகத்திற்கு 106 ஏக்கர் போக மீதியுள்ள 200 ஏக்கர் நிலத்தில் ரூ.1500 கோடி செலவில் கடல்சார் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. அரசு-தனியார் கூட்டு முயற்சியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இந்த வளாகத்தில் அருங்காட்சியகம், கலைக்கூடம், கடல்வாழ் உயிரின வளர்ப்பு மையம், வணிக வளாகம், கேட்டரிங் கல்லூரி, 5 நட்சத்திர உணவகம் மற்றும் சுமார் 15 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக் கூடிய அளவுக்கு அதிநவீன மாநாட்டு கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட புதிய கட்டிடப் பணிகள் வரும் 2010-க்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இவ்வாறு இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி விஜயன் தெரிவித்தார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ச‌ட்வரைவகடந்த அக்டோபர் 22ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்து அக்டோபர் 24ஆம் தேதியன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடு‌த்து குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் இந்த பல்கலைக்கழகத்திற்கான முதல் துணை வேந்தராக தேசிய கடல்சார் அகாடமியின் இயக்குனர் டாக்டர் பி. விஜயனை நியமித்து உத்தரவிட்டார். இவர் மூன்றாண்டு காலம் இந்த பதவி வகிப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்