காஷ்மீரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

ஞாயிறு, 16 நவம்பர் 2008 (16:24 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 10 தொகுதிகளில் திங்கட்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 87 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், முதல் கட்டமாக நாளை பந்திபுரா, கார்கில், லே, பூஞ்ச் மாவட்டங்களில் அடங்கிய உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 102 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் ஆயிரத்து 38 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்