தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை: மத்திய அரசு முடிவு!

வியாழன், 13 நவம்பர் 2008 (12:26 IST)
மக்களிடையே மதுப்பழக்கத்தை குறைக்கும் நோக்கில், மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள், உடல்நலக் கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், இக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. மக்கள் நலன் கருதி மாநில அரசுகள் இக்கொள்கையை அமல்படுத்தலாம் என்று மட்டுமே மத்திய அரசு வலியுறுத்தும் என்றார்.

மதுப்பழக்கதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அது தவறானது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கம் என்றும் அன்புமணி அப்போது கூறினார்.

நாட்டில் தற்போது 6 முதல் 7 கோடி மக்கள் மதுபானம் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 50% பேர் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அபாயகரமான நிலையில் உள்ளனர். மேலும் டெல்லியில் நடைபெறும் சாலை விபத்துகளில் 40% மதுபானம் பயன்படுத்துவதால்தான் ஏற்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுபானம் பயன்படுத்துபவர்களின் சராசரி வயது 19 என்ற அளவில் இருந்து 13.5 ஆக சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்றார்.

விளம்பரங்களுக்கு வரையறை: உண்மையைத் திரித்துக் கூறும் வகையில் ஊடகங்களில் வெளியிடப்படும்/ஒளிபரப்படும் மதுபான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு, சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இவ்விஷயத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்