உத்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டம் பாவர்கடா கிராமத்தில் 24 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், விழுந்த 7 வயது சிறுவன மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பாவர்கடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் என்பவரின் மகன் புனீத் (வயது 7). இச்சிறுவன் சனிக்கிழமையன்று தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
அந்த கிணறு 24 அடி ஆழம் கொண்டது. ஒரு அடி அகலத்துடன் குறுகலாக உள்ளது. சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் போலீசாரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் ராணுவத்தின் உதவி கோரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்ற ஆழ்துளை கிணறு தோண்டப்படும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சிறுவர்கள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து உயிரிழப்பதும் அல்லது மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது வருந்தத்தக்கது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.