வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். சேவை முடங்குகிறது!

புதன், 24 செப்டம்பர் 2008 (12:46 IST)
இந்திய வங்கிகள் சங்கத்திற்கும், வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் இன்றும், நாளையும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

புது டெல்லியில் நேற்று தலைமை தொழிலாளர் நல அதிகாரி எஸ்.கே முகோபாத்யா முன்னிலையில் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும், வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, ஊதிய உயர்வு, ஓய்வு கால ஊதியம், வாரிசுக்கு வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னதாக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.

அத்துடன் வங்கிகள் தனியார் மயம், வங்கிகள் இணைப்பு, வங்கிகள் சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கைகளையும் வங்கி ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

மத்திய அரசு சென்ற வாரம் இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

இதற்கடுத்து நேற்று புதுடெல்லியில் தலைமை தொழிலாளர் நல அதிகாரி எஸ்.கே முகோபாத்யா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு கன்வீனர் சி.ஹெச்.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் குறித்து, இந்திய வங்கிகள் சங்கம் எவ்வித உறுதி மொழியையும் கொடுக்கவில்லை. எனவே திட்டமிட்டபடி இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகின்றோம் என்று தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தத்தால் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) இயக்கம், வங்கி அலுவல்கள் பாதிக்கப்படும்.

ஏற்கனவே சில வங்கிகள், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்போவதால், வாடிக்கையாளர்கள் தேவையான பணத்தை முன்னதாக எடுத்து வைத்துக் கொள்ளும்படி விளம்பரங்கள் வாயிலாக தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், 10 லட்சம் வங்கி ஊழியர்களை உறுப்பினராக கொண்ட 9 தொழிற்சங்கங்களின் அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கலை எதிர்த்தும், ரகுராம் ராஜன் ஆணையம், ஹோடா ஆணையத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கக் கோரியும், வங்கிகள் இணைப்பை எதிர்த்தும், ஒப்பந்தங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றக்கோரியும், 9-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தக்கோரியும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தததால் நாடு முழுவதும் உள்ள 36 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் இயங்காது. இந்த ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்ப ஊழியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அதன் சேவை பாதிக்கப்படும். சென்னையில் இன்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்