இந்திய அஞ்சல் துறைக்கு நாளை முதல் புதிய சின்னம்!
திங்கள், 22 செப்டம்பர் 2008 (18:29 IST)
இந்திய அஞ்சல் துறை நாளை முதல் புதிய சின்னம் (Logo), நவீன சேவைகள் என்று புதுபொலிவு பெற இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், அஞ்சல் சேவைகளிலும் நாளை முதல் இந்த புதிய சின்னம் காணப்படும்.
அஞ்சல் துறையின் இந்த புதிய நிறுவன சின்னத்தை மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா நாளை புது டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அஞ்சல் துறையை நவீனமயமாக்கம் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. கிராம மக்களுக்கு அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக பலதரப்பட்ட வசதிகள், திட்டங்கள் கிடைக்கச் செய்யும் நோக்குடன் 'பிராஜக்ட் ஏரோ' என்ற திட்டம் தொடங்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறை நெட்வார்க் இணைப்பை மேம்படுத்துவது, சாமானிய மக்களின் தேவைகளை கண்டறிந்து அதை அஞ்சல் துறை மூலமாக நிறைவேற்றுவது, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நாட்டில் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவையே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவலகங்களின் வெளிப்புற, உள்புற தோற்றத்தையே அடியோடு மாற்றியமைப்பது, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான சேவை வழங்குவது, கணினி மென்பொருள், வன் பொருள் வசதிகளை முழு அளவில் பயன்படுத்திக் கொள்வது, இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை மேம்படுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டின் கடைசிக்குள் நாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய மாற்றங்களுடன் 500 'பிராஜக்ட் ஏரோ' அஞ்சல் அலுவலகங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிதும் தாமதமின்றி குறித்த காலத்தில் இந்த நவீன அஞ்சல் அலுவலகங்களை செயல்படச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களிலேயே வங்கிச் சேவை, பணம் செலுத்துதல், வேறொருவருக்கு பணம் அனுப்புதல் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் போன்றவற்றையும் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக செயல்படுத்தி பண உதவிகளை உரியவர்களிடம் வழங்கவும் முடியும்.