ஆருஷி வழக்கு: ராஜ்குமார் ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:04 IST)
டெல்லி அருகே நொய்டாவில் பள்ளி மாணவி ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவிற்கு மத்திய புலனாய்வுக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராஜ்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றொரு குற்றவாளியான கிருஷ்ணாவும் தனது வழக்கறிஞர் மூலமாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். கிருஷ்ணா, கொலை செய்யப்பட்ட ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வாரிடம் உதவியாளராக இருந்தவர்.

ராஜ்குமாருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

கொலையுண்ட ஹேமராஜூடன் கொலை நடந்த தினத்தன்று ராஜ்குமார் தொடர்ந்து பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு தங்களிடம் இருப்பதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 27ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்தவரான ராஜ்குமாரை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும் என்றும், தனக்கு எதிரான சாட்சியங்களை மறைத்து விடுவார் என்றும் சிபிஐ வழக்கறிஞர் வாதாடினார்.

ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

கடந்த மே மாதம் 15ம் தேதியன்று இரவு ஆருஷியும், அவரது வீட்டு வேலைக்காரரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மே மாதம் 31ம் தேதியன்று மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஆருஷியின் தந்தையும், பல் மருத்துவருமான ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டு, ஒருமாதத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்