தண்டவாளத்தில் குண்டு: தப்பியது மங்களூர் எக்ஸ்பிரஸ்!

சனி, 19 ஜூலை 2008 (17:49 IST)
கேரள மாநிலம் தலச்சேரி அருகே ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை தக்க சமயத்தில் அகற்றியதால், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்பாக சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலச்சேரி அருகே உள்ள புன்னூல் என்ற இடத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டை பார்த்த ரயில்வே ஊழியர் உடனடியாக அதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் காலை 10 மணியளவில் நாட்டு வெடிகுண்டை தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றினர்.

முன்னதாக சென்னையில் இருந்து மங்களூர் நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், தலச்சேரிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் மங்களூர் ரயில் பாதுகாப்பாக பயணித்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்