காஷ்மீர் போராட்டங்கள்: ஐ.எஸ்.ஐ. தூண்டி விடுகிறது – பீம் சிங் குற்றச்சாற்று!

வியாழன், 26 ஜூன் 2008 (14:01 IST)
புனித அமர்நாத் கோயிலின் நிர்வாக அலுவலத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டங்களை பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் தூண்டி விடுகிறது என்று பேராசிரியர் பீம் சிங் குற்றம் சாற்றியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாத்த்திற்கு ஆதரவளித்து எதையும் சாதிக்க முடியாத ஐ.எஸ்.ஐ., காஷ்மீரிகளை மத ரீதியாகப் பிரித்து மோதவிடும் உள் நோக்கத்துடன் இந்தப் போராட்டங்களைத் தூண்டி விடுகிறது என்றும், இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் பலியாகிவிட்டதாகவும் பீம் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மக்களிடையே மரியாதையும், ஆதரவும் பெற்றவரும், ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் என்றழைக்கப்படும் கட்சியின் தலைவருமான பீம் சிங், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மத ரீதியில் பெரும்பான்மையான மக்கள், தொன்றுதொட்டு சிறுபானமையாக உள்ள மக்களின் மத உணர்வுகளை மதித்தே வாழ்ந்துவருகின்றனர் என்றும், அதனால்தான் இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவினையின்போது கூட காஷ்மீரில் மதக் கலவரம் ஏதும் நிகழவில்லை என்று இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

காஷ்மீர் மக்கள் கடைபிடித்துவரும் மத நல்லிணக்கத்தின் காரணமாகத்தான், புனித அமர்நாத், வைஷ்ணோ தேவி மாதா கோயில்களும், ஷெரார்-ஈ-ஷெரீஃப் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் நிறைந்து காணப்படும் புனித இடமாக உள்ளது என்று பீம் சிங் கூறியுள்ளார்.

ஜம்முவிலுள்ள காட்டுப் பகுதியை அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு அரசு அளித்ததை எதிர்க்கும் வழக்கறிஞர்கள் அதனை சட்டப் பூர்வமாக நீதிமன்றத்தில் எதிர்க்காமல் வீதியில் இறங்கிப் போராடுவதை பீம் சிங் கண்டித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்