ஐ.ஏ.இ.ஏ. உடன்படிக்கை : பிரணாப் - காரத் சந்திப்பு!

செவ்வாய், 17 ஜூன் 2008 (13:16 IST)
புதுடெல்லி: சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையுடன் கண்காணிப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட இடது சாரிகளின் அனுமதியைக் கோருவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

இதனை நிறைவேற்றிவிட்டால் ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா அணு வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஆனால் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையின் உடன்படிக்கையை அனுமதிப்பது, ஏறத்தாழ 123 உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சமம் என்று பிரகாஷ் காரத் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்பு கண்காணிப்பு உடன்படிக்கைக்கு சர்வதேச அணுசக்தி முகைமையின் ஒப்புதலைப் பெறுவது இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்ற பின்னணியில் பேசப்படுகிறது, எனவே இதனை ஏற்கமுடியாது என்று இடது சாரிக் கட்சிகள் கூறிவருகின்றன.

ரஷ்யாவுடனும், பிரான்சுடனும் அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தற்போது சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையிடம் செல்ல வேண்டிய தேவையில்லை, ஏனெனில் இந்த இரு நாடுகளும் இந்தியாவுடன் இன்னமும் இருதரப்பு அணு உடன்படிக்கைகள் எதையும் செய்து கொள்ளவில்லை என்று இடது சாரிக் கட்சியினர் கூறுகின்றனர்.

"எங்கள் பிரச்சனை ஐ.ஏ.இ.ஏ. அல்ல, 123 உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதுதான் பிரச்சனை" என்று சி.பி.எம். கட்சியின் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடது சாரிக் குழு கடந்த நவம்பரில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாளை கூடி இதன் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்