அணு ஒப்பந்தம் : ரைஸிடம் விளக்கினார் பிரணாப்!

சனி, 10 மே 2008 (15:59 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் உள்ள சிக்கல்களை இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க அயலுறவுச் செயலர் காண்டலீசா ரைஸிடம் விளக்கினார்.

ரைஸிடம் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைபடுத்த அமெரிக்கா வலியுறுத்துவதன் காரணமாக இந்திய தரப்பில் இந்த விவகாரம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிந்துகொள்ள ரைஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.

இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்புகளால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்று ரைஸிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்த இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் மே இறுதிக்குள் முடிவு தெரியவேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்கு வரும் முன் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகமையுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்யவேண்டும். மேலும் 45 நாடுகள் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிலிருந்து விலக்கையும் பெறவேண்டும்.

இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மேற்கூறிய நடைமுறைகள் தாமதமாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்