வங்கி பரிமாற்ற வரி நீக்கம் - சிதம்பரம்!

புதன், 30 ஏப்ரல் 2008 (16:35 IST)
வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் பண பரிமாற்ற வரி நீக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் குறுக்கிட்டு பேசும் போது சிதம்பரம், கறுப்பு பணத்தை தடுக்க அரசு மாற்று வழிகளை கடைப்பிடிக்கும். இந்த வருட இறுதியில் வங்கிகளில் வசூலிக்கப்படும் பண பரிமாற்ற வரி ரத்து செய்யப்படும்.

கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் பணபரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.

புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தில், கணக்கில் வராத பணத்தை கையாள்பவர்களை பிடிக்க தேவையான வழிமுறைகள் இருக்கும் என்று சிதம்பரம் கூறினார்.

மாநிலங்களவையின் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங் பண பரிமாற்ற வரி பிடித்தம் செய்வதால், பொதுமக்களுக்கு பாதிப்பாக இருப்பதாக கூறியதை மறுத்த சிதம்பரம், பொது மக்களில் எத்தனை பேர் ஒரே நாளில் ஒரே தடவையில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக வங்கியில் இருந்து பணம் எடுக்கின்றனர் என்று கேட்டார்.

இந்த வரி ரொக்கமாக பணம் எடுத்தால் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. காசோலை போன்றவைகளுக்கு வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை. இந்த வரி பிடித்தம் செய்வதால், வருமான வரி துறை அதிகாரிகளால், ஏய்ப்பு செய்த பெரிய மனிதர்களின் பெயரை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக சிதம்பரம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்