பங்குச் சந்தை புரோக்கர் கேதன் பரேக்குக்கு ஒரு வருடம் சிறை தண்டனை!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (17:05 IST)
பங்குச் சந்தையில் மோசடி செய்த குற்றத்திற்காக, பங்குச் சந்தை புரோக்கர் கேதன் பரேக் மற்றும் ஐந்து பேருக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்றம் ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்தது.

பெங்களுரைச் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கனரா வங்கியின் துணை அமைப்பான கேன் பைனான்ஸ் என்று அழைக்கப்படும் கேன்பாங்க் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தை மோசடி செய்து ரூ.47 கோடியே 70 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

கேன் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.47.7 கோடி மும்பையிலுள்ள கனரா பாங்க் பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு தவறுதலாக அனுப்பப்பட்டது. இதை கனரா பாங்க் பரஸ்பர நிறுவனத்தின் உள்ள அதிகாரிகள் கேன் பைனான்ஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பாமல், பங்குச் சந்தை புரோக்கர் கேதன் பரேக் மற்றம் சில புரோக்கர்கள் கணக்கில் வரவு வைத்தனர். இதன் வாயிலாக ரூ.47 கோடியே 70 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்ற நீதிபதி எம்.வி.கனடே முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கேதன் பரேக்கும் மற்ற ஏழு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி எம்.வி.கனடே தீர்ப்பளித்தார்.

இதில் கேதன் பரேக், பி.ஆர்.ஆச்சார்யா, ஹிதன் தலால், எஸ்.கே.ஜவாரி, பல்லவ் சேத், எம்.கே.அசோக் குமார் ஆகியோருக்கு 1 வருட கடுங்காவல் தண்டனை வழங்கினார்.

சாய்நாத், நவீன் சந்திரா பரேக் ஆகிய இருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஏற்கனவே கேதன் பரேக், தலால் மற்றும் கேன் பைனான்ஸ் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தார்.

இன்று இவர்கள் மீதான தண்டனையை அறிவித்தார்.

தண்டனை பெற்றுள்ளவர்களில் கேதன் பரேக், ஹிதன் தலால், எஸ்.கே.ஜவரி, பல்லவ் சேத், நவீன் சந்திரா பரேக் ஆகியோர் பங்குச் சந்தை புரோக்கர்கள்.

சாய்நாத் மோகன், எம்.கே.அசோக் குமார் ஆகியோர் கேன் பைனான்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக இருந்தவர்கள். பி.எஸ்.ஆச்சார்யா என்பவர் கனரா வங்கியின் பரஸ்பர நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்தவர்.

குற்றம் சாட்டப்பட்ட கேன் பைனான்ஸ் நிறுவனத்தின் உதவி துணை தலைவர் என்.பாலசுப்பிரமணியம், உயர் அதிகாரிகள் பி.ஜே.சுப்பாராவ், பி.வி.சீனிவாசன் ஆகிய மூவரும் நிரபராதிகள் என நீதிபதி அறிவித்தார்.

பங்குச் சந்தைய தனி மனிதனாக இருந்து கதி கலங்க வைத்த கேதன் பரேக் மீது, அகமதாபாத்தை சேர்ந்த மாதவபுரா வங்கி தொடர்ந்த மோசடி வழக்கும் நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்