உணவு தானியங்கள் விலை உயர அமெரிக்காவே காரணம்!

வியாழன், 27 மார்ச் 2008 (19:57 IST)
பெட்ரோல், டீசலுடன் கலப்பதற்கு அமெரிக்கா அதிக அளவு உணவு தானியங்களை பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிப்பதால்தான் விலை அதிகரிக்கின்றது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாற்றியுள்ளார்.

சிங்கப்பூரில் லீ க்யூவான் யேவ் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிதம்பரம நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்கா அதிக அளவு மக்காச் சோளம் போன்ற உணவு தானியங்களை உயிரி எரிபொருள் தாயாரிக்கப் பயன்படுத்துகிறது. இதனால் உலக அளவில் உணவு தானியங்களின் விலை அதிகரிக்கின்றன.

அமெரிக்காவில் உற்பத்தியாகும் மக்காச் சோளத்தில் 20 விழுக்காடு உயிரி எரிபொருள் தயாரிக்க பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக மக்களில் நாமும் ஒருவர் என்ற முறையில் உணவு தானியங்களை. எரிசக்திக்கு பயன் படுத்தும் முட்டாள்தனத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டியதுள்ளது.

உணவு தானியங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலைகள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் இதை எரி சக்தி எண்ணெய் தாயரிக்க பயன் படுத்த தொடங்கி இருப்பதால், உணவு தானியங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கின்றது. இது சில நாடுகள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க எடுக்கும் தவறான முடிவுகளாகும்.

அரிசி, கோதுமை, மக்காச் சோளம் போன்ற உணவு தானியங்களின் விலை 2004 ஆம் ஆண்டில் இருந்து 2008 ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை அதிகரித்து உள்ளது.

உணவு மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சுமை அதிகரிக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்,யூரியா,உலோகம் மற்றும் தாதுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்தியா அதிக அளவு யூரியாவை இறக்குமதி செய்கிறது. 2004 ஆம் ஆண்டு 1 டன் யூரியா விலை 175 டாலராக இருந்தது. இது 2007 ஏப்ரலில் 288 டாலராக உயர்ந்துவிட்டது. இந்த வருடம் ஜனவரியில் 370 டாலராக அதிகரித்துவிட்டது என்று சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்