பயங்கரவாதிகளின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள எல்.கே.அத்வானி, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோருக்கு `இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., இந்தியத் தலைவர்களை கொல்வதற்காக பயங்கரவாதிகளைத் தூண்டி விடுவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் சதிதிட்டத்தை நிறைவேற்ற முடியாததால், அயல்நாட்டில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிம் கும்பலின் உதவியை ஐ.எஸ்.ஐ. நாடியுள்ளதாக மத்திய அரசின் உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் பதுங்கியுள்ள அவனது கூட்டாளிகள் மூலம் சதிதிட்டம் நிறைவேற்றப்படலாம் என்று நமது உளவு அமைப்புகள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.
இதையடுத்து அத்வானி, நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தகவல் இருவரின் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.